பலத்த சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை 12 வாரத்தில் இடித்து அகற்ற வேண்டும் தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 அபராதம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




பலத்த சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை 12 வாரத்தில் இடித்து அகற்ற வேண்டும். தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தொண்டியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறை வசதிகள் கிடையாது. அதேபோல விளையாட்டு மைதானம், காலை மற்றும் மதிய உணவு அருந்தும் அறையும் இல்லை. இந்த பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 16 ஆண்டுக்கு முன்பு இந்த பள்ளி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்நிலையில் அந்த கட்டிடம் உள்ளது.

எனவே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பே கட்டிடத்தை இடித்து அகற்றும்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தொண்டியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

புகைப்படங்கள் தாக்கல்

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, தொண்டி தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து, அபாயகரமான நிலையில் உள்ளது தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், பலத்த சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தில் எப்படி வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை அங்கு உள்ளது என அதிருப்தி தெரிவித்தனர்.

இடித்து அகற்ற உத்தரவு

விசாரணை முடிவில், தொண்டி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை 12 வாரத்தில் இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிக்கும்பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. அந்த தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments