திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் ரூ.51.39 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது




திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.51.39 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் நேற்று சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 4 பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

1 கிலோ 488 கிராம்

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் 8 சங்கிலி வடிவிலான தங்கத்தையும், 2 வளையல் வடிவிலான தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 488 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டு பணம்

இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் செல்ல காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை தனியாக அழைத்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

மேலும் அவரது உடைமைகளை சோதனை செய்ததில் வெளிநாட்டு பணமான அமெரிக்கா டாலர், சிங்கப்பூர் டாலர், அரேபியா ரியால் மற்றும் இந்திய ரூபாய்கள் என ரூ.51 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான பணம் இருந்தது. தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments