மீமிசல் அருகே ஆழம்மிஞ்சிகாடு பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்ததால் பரபரப்பு




மீமிசல் அருகே ஆழம்மிஞ்சிகாடு பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனித கழிவு சுத்திகரிப்பு மையம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே ஆழம்மிஞ்சிகாடு பகுதியில் மனித கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அதே பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு மையம் அமைக்க சம்பந்தப்பட்ட இடம் தேர்வு செய்து துறை அதிகாரிகள் இடத்தை பார்வையிட சென்றுள்ளனர். அதற்கு அங்குள்ள மக்கள் குடியிருப்பு பகுதி அருகே சுத்திகரிப்பு மையம் ஆரம்பித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாத சூழல் உருவாகும் என்று கூறி அதிகாரிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

தேர்தலை புறக்கணிக்க முடிவு

இந்நிலையில் அப்பகுதி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோருவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, சுத்திகரிப்பு மையம் இந்த இடத்தில் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்றும், அதனையும் மீறி அதிகாரிகள் செயல்படுத்த முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வந்தோம். மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விட்டோம். ஆனால் அரசு வழங்கிய வீட்டு மனைப்பட்டா எங்கள் கையில் உள்ளது. அது செல்லாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்றளவும் அந்த இடத்தில் எங்களுக்கு அனுபவம் உள்ளது, என்றனர்.


 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments