உங்கள் பிள்ளைகளுக்கு நண்பர்கள் யார்? உண்மையான நண்பர்களுக்கு பதிலாக கற்பனை கதாபாத்திரங்களே நண்பர்களாக உள்ளார்களா? அந்தக கற்பனைப் பாத்திரங்களுடன் அவர்கள் இலயித்துக் கிடக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் அவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
நர்சரி பள்ளியில் பாலர் வகுப்பில் படிக்கும் அப்துல்லா மிகச் சோர்வாகவும், கண்கள் ஒடுங்கியும் காணப்பட்டான். அவன் ஏதோ மனசிக்கலில் இருக்கின்றான் என்பது மட்டும் வெளிப்படையாகவே தெரிந்தது. 'இப்போல்லாம் அவன் படிப்பில் அக்கறையில்லாமல் கவனக்குறைவாக இருக்கிறான்இ ஏதோ வித்தியாசம் தெரியுது அவங்கிட்ட'. என்று கவலைப்படுகிறார்கள் அப்துல்லாவின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
அப்துல்லாவின் அம்மா ஆரிஃபா சொல்லும்போது, 'அப்துல்லா எப்பவுமே டிவியே பார்த்துக்கிட்டு இருப்பான். ஸ்கூல் தோழமார், கூட்டாளிங்களப் பத்தி
பேச வேண்டிய சமயத்திலயும் ... டிவியில வர்ற BEN-10,POKMAN,CHUTTI பத்தியே பேசுறான் . பள்ளியிலும் கூட இதே மாதிரி ரசனைகள் கொண்ட வகுப்புத் தோழர்களோட மட்டுமே பேசுறானாம்.'
இதன் விளைவு அப்துல்லாவுக்கு உண்மையான நண்பர்களே இல்லை என்று ஆயிற்று. அவனுக்கு கற்பனை நண்பர்கள் மட்டுமே. அந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு அவன் அடிமையானது மட்டுமில்லாமல் பிடிவாதமாகவும் இருந்தான்.
'குழந்தைப் பருவத்தில் தொலைக்காட்சி பார்ப்பது, எதிர்காலத்தில் கவனமின்மையை ஏற்படுத்துகின்றது' என்கிறார் சியாட்டிலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பிராந்திய மருத்துவ மையத்தின் குழந்தைநல மருத்துவ ஆய்வாளர், மருத்துவர் டிமிட்ரி கிரிஸ்டாக்கிஸ் (Dimitri Christakis). அவரது ஆய்வின் படி : ஒரு வயதிலிருந்து மூன்று வயதுவரை உள்ள குழந்தைகள் தினமும் ஒரு மணிநேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதின் மூலம் அவர்களது ஏழு வயதில் பத்து சதவிகிதம் கவனக்குறைவிற்கு ஆளாகின்றார்கள். தினமும் மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகள் ஏழு வயதாகும் போது தொலைகாட்சி பார்க்காத குழந்தைகளைக் காட்டிலும் முப்பது சதவிகிதம் கவனக்குறைவாக இருக்கின்றார்கள். இவ்வாறு அதிகமாக தொலைகாட்சி பார்ப்பதால்.பார்வை கோளாறுகள் ஏற்படுவது மட்டுமன்றி வேறுபல மனரீதியான குறைகளும் அதாவது கவனக்குறைவு, உண்மை வாழ்க்கை நிலையை ஏற்றுக்கொள்ளாத தன்மை இவற்றுடன் நண்பர்களிடம் நிதர்சனத்திற்கு மாறான எதிர்பார்ப்புகள் ஆகியவையும் உருவாகின்றனவாம்.
நல்ல பழக்கத்தைப் பயிரிடுங்கள்:
ஒரு குழந்தை தன் முதல் இரு ஆண்டுகளிலேயே மூளை வளர்ச்சி விகிதம்
சிறப்படையப் பெறுகின்றது. குழந்தைகளைப் பெற்றோர்கள் மற்றும்
உறவினர்களுடன் விளையாட வைத்தல் மற்றும் பேசவைத்து வெளிக்கொண்டு வருவது மூலமே சமூகத்துடன் அவை ஒன்றுவதற்கு செய்ய முடியும். தொலைகாட்சியின் மிகப் பெரிய தாக்கம் மூளையை உணர்ச்சி வசப்படுத்தி அதிகமான தூண்டுதலுக்கு ஆளாக்குகின்றது. குழந்தைகள் எவ்வளவு அதிகமாக தொலைக்காட்சியைப் பார்க்கின்றார்களோ அவ்வளவு அதிகமாக மனக்கிளர்ச்சி அமைதியின்மை மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகிய பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் நமது இயற்கையான வாழ்வியல் முறைக்கு மாறாக
தொலைக்காட்சியில் உள்ள நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் துரிதமான காட்சி
மாற்றங்களும் தான். இப்படி திடிரென இயற்கைக்கு மாற்றாக ஒரு குழந்தை
உள்ளாக்கப்படும்போது அதனுள் நரம்பியல் தொடர்மாற்றங்கள் ஏற்படுகின்றது. ஒரு குழந்தை தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மெய்மறப்பதால் அதன் நரம்புகள் வளர்ச்சி குன்றுகின்றனவாம்.
தொலைக்காட்சி ஒன்றும் உங்கள் குடும்ப அங்கத்தினர் அல்ல!
அன்பார்ந்த பெற்றோர்களே!
சாப்பாட்டு நேரம், குடும்பத்தின் நேரமாக இருக்கவேண்டும் குறிப்பாக இரவு நேர சாப்பாட்டு நேரம். இந்த நேரத்தில் மட்டும் தான் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் ஒன்றாக அமர்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பரிமாறிக் கொண்டு மகிழ்வுடன் சாப்பிட முடியும். இத்தகைய குடும்பப் பரிமாற்றங்கள் குழந்தையின் மன வளர்ச்சிக்கு முக்கியமானதாக அமைகின்றது.
வேலை நேரத்தில் வேலை விளையாட்டு நேரத்தில் விளையாட்டு:
பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சி
பார்ப்பதின் மூலம் பிள்ளைகளுக்குப் படிப்பில் இருக்கும் கவனத்தைச் சிதறச் செய்கின்றார்கள். பிள்ளைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சியை
அணைப்பது பொறுப்பான பெற்றோர்களின் கடமையாகும். இதை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள்:
பள்ளிப்பாடங்கள் விளையாட்டுகள் மற்றும் வேலையின் பொறுப்புகள்
ஆகியவற்றுக்கிடையே தொ கா நிகழ்ச்சிகள் - இப்படி உங்களுக்குக்
குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதில் சிரமமாக இருக்கலாம். அப்படியான
சமயங்களில் தொலைக்காட்சியின் முக்கியமான நல்ல நிகழ்ச்சிகளைப் பதிவு
செய்து வைத்து பிறகு பார்ப்பதின் மூலம் தொலைக்காட்சியின் முன் நீங்கள்
அமரும் நேரம் மிகவும் குறைகின்றது. இதனால் அதிகமான நேரம் உங்கள்
குடும்பத்துடன் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு ஒரு
முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
மாற்றுவழிகளை கொடுங்கள்:
தொலைக்காட்சிக்குத் தொடர்பில்லாத புத்தகம் படித்தல், விளையாட்டு
பொருட்கள், புதிர் விளையாட்டுக்கள் போன்ற பல பொழுதுபோக்குகளில்
உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுடன் தரமான நேரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். வெளியே சென்று விளையாடுவது மற்றும் கைவின பொருட்கள் செய்யும் பொழுதுபோக்குகளையும் கற்றுக் கொடுங்கள்.
முறைப்படுத்துங்கள்:
குடும்பத்துடன் காணக்கூடிய அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளை நிரல்படுத்தி
குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒட்டிவையுங்கள். அந்த
நிகழ்ச்சிகள் முடிந்ததும்இ தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள்.
உடன் இருந்து பாருங்கள்:
குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிப்பதாக இருந்தால் அவர்களுடன் நீங்களும் இருந்து பார்க்கும் நிலையில் அனுமதியுங்கள். தங்களின் வேலை காரணமாக முழுமையாக இருக்க முடியாவிட்டால் முதல் சில மணித்துளிகளாவத இருந்து நிகழ்ச்சியின் நெறியினைக் கவனியுங்கள். இடையிடையேயும் கவனியுங்கள்.
ஒரு சிறப்புரிமை பெறவேண்டும் :
தொலைக்காட்சி பார்ப்பதற்கு முன்இ வீட்டுப்பாடங்கள் மற்றும் பணிகளை
முடித்தபிறகே பார்க்க முடியும் என்று நிபந்தனை விதித்து அதை
முறைப்படுத்துங்கள்.
சேனலைப் பூட்டி வையுங்கள் :
பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான சேனல்களைத்
திருட்டுத்தனமாக பார்ப்பதற்காக ஒலி அளவை குறைத்து வைத்துக்கொண்டு
பார்ப்பார்கள். இதனால் பார்வை கோளாறுகள் ஏற்படலாம். ஆகையால் அத்தகைய சேனல்களைப் பூட்டி வையுங்கள். குழந்தைகள் அவர்களின் தனி திறனை உணரும் விதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். தொலைக்காட்சி மூலம் பெறப்படும் அறிவு முறையாக நெறிபடுத்தபடாவிட்டால் அது தேக்கமடைந்துவிடும். தொலைக்காட்சியால் நல்ல பயன்களும் உள்ளன. ஆனால் வயதிற்கு மீறிய வெளிப்பாடுகள் அவர்கள் மூளை வளர்ச்சிக்குப் பாதகமாக அமைந்துவிடும்.
ஆகவே,
ஒரு பெற்றோராக நாம் சிறந்த ஒரு அடிப்படையைக் கையாளவேண்டும் எனில் நம் குழந்தைக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக தொலைக்காட்சியை அணைத்து விடுவதே நல்லது.
(The Hindu இதழில் GEORGE MATHEW & DR. SUJA K. குன்னத் எழுதிய கட்டுரையைத்தழுவியது.)
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.