ஜீம்ஆ சிறப்பும் வெள்ளிக்கிழமையும்



ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல்குர்ஆன் 62:9)




எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.
இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில் வீண் கேளிக்கைகளில், திரைப்படக் கூத்துகளில் கழிந்து கொண்டிருக்கின்றது.

இதே போலத் தான் அரபகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையின் அருமை பெருமை தெரியாமல், அரபக மக்களும் சரி! இங்கிருந்து பிழைக்கப் போனவர்களும் சரி! வீடியோ பார்ப்பதிலும் வீணான காரியங்களிலும் ஈடுபட்டு அந்நாளின் புனிதத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு சாரார் இந்நாளுக்குரிய அருமை பெருமைகளை, சிறப்புகளைத் தெரிந்து
வணக்கங்களிலும் மார்க்க சொற்பொழிவுகளை ஏற்படுத்தி அதைக் கேட்பதிலும்
தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். இதுபோல் நன்மையில் ஈடுபடுகின்ற
மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையிலும் இந்நாளின் இன்ன பிற சிறப்புகளைத் தெரிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் ஜும்ஆ நாளின் சிறப்புகளையும் ஜும்ஆ நாளை சும்மா கழிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்:-
 ''இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414)






உலகில் ஓர் உயர் நாள் :-
 ''சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும்.
அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு
நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450




உதயமாகும் இந்நாளில் ஓதவேண்டிய அத்தியாயம் :-
 ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்




இந்நாளில் ஓதப்படும் ஸலவாத் இறைத்தூதருக்குக் காட்டப்படல் :-
 உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில்
தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர்
கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள்
மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை
அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, ''நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்'' என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: அபூதாவூத் 883




(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவி யேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. ''நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப்
பதிவு செய்யப் பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம் :-
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, ''ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு'' என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ''அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்றும் குறிப்பிட்டார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 935




__ஜும்ஆ தொழுகை___

வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல் :-
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல் :-
 ''ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198




''ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட
அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம்
பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக, ''நன்மை
செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை
அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்''
(அல்குர்ஆன் 6:160) என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.

''ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய
எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக்
கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு
நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு,
இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த
ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்
படுகின்றன'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 883




முஸ்லிமில் அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் 'பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், 'நல்லாடை அணிதல்' என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை :-
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே
(பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று,
ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூல்: நஸயீ 1381
இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் ''வாகனத்தில் வராமல்....''
என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களின் முக்கிய கடமை :-
 ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களில் மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள், அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை காண்போம்.

இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.

''ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப்
பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி
கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881



இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?

பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள் :-
''ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும்
மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை லி அடுத்து வருபவரைப்
பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச்
சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்'' என்று அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1416



நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள் :-
''இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், 'வாய்
மூடு' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்'' என்று
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 934
''யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர்
(ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 1419




மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து
(குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான். மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்இமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், ''நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்'' என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,                 நூல்: அபூதாவூத் 939

இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று
ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.

ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள் :-
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள்
சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

''அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற
கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார்
கூறினர். அதற்கவர்கள் ''உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது)
தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும்
(அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது ''இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163,166)

இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை
நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.

இதயங்கள் இறுகி விடும் :-
''ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்!இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1432.



''அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460




இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும் :-
''ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல்
இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு
உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும்
ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1043)

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக.

Post a Comment

0 Comments