ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: துணை ராணுவத்தினர் 44 பேர் உயிரிழப்பு



ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவத்தினர் 44 பேர் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், ரிசர்வ் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினான்.


இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 10, 12, 25 என அதிகரித்து தற்போது 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''வீரர்களின் தியாகம் வீண்போகாது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரோடு இந்த நாட்டு மக்கள் அனைவரும் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று அமெரிக்க கூறியுள்ளது. 

2016-ல் உரி தாக்குல் நடந்தது. இதில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

Post a Comment