மணமேல்குடி ஒன்றியத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா கோலாகலத் தொடக்கம்: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகப் பங்கேற்பு!



மணமேல்குடி ஒன்றியத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான ‘கலைத் திருவிழா’ போட்டிகள் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிகவும் விமரிசையாகத் தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கலைத் திருவிழாவினை, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஜீவானந்தம் அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. இளங்கோவன், மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திரு. செழியன் மற்றும் மணமேல்குடி வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) திரு. சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் திரு. ஜோக்கின் ராய் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மணமேல்குடி வட்டாட்சியர் மதிப்பிற்குரிய திரு. மார்ட்டின் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களிடையே கல்வியின் அவசியத்தையும் கலைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துச் சிறப்புரையாற்றினார்.

‘இளையோர் திறன்’ தலைப்பில் போட்டிகள்: முதல் நாளான இன்று 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் 'இளையோர் திறன்' எனும் தலைப்பில் தொடங்கின. மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், கேலிச்சித்திரம் வரைதல், ரங்கோலி, பானை ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், செதுக்கு சிற்பம், களிமண் பொம்மைகள் செய்தல், மாறுவேடப் போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம், பல குரல் நடிப்பு, தனி நாட்டுப்புறப் பாடல், குழு வில்லுப்பாட்டு, செவியலிசை (தனி இசை), பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் நடுவர்களாக ஆசிரியர் பயிற்றுநர் திரு. பன்னீர்செல்வன், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

மணமேல்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் இக்கலைத் திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர். இதில் வட்டார அளவில் வெற்றிபெறும் மாணவர்கள், அடுத்தகட்டமாக மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments