சென்னையில் 2 ரூபாய்க்கு சிகிச்சை... தந்தை இறந்த பின்பும் சேவையைத் தொடர்ந்த குடும்பத்தினர்...!



பழைய வண்ணாரப்பேட்டையில் கிளீனிக் வைத்திருந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் அங்கிருக்கும் ஏழை மக்களுக்காக வெறும் 2 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தார்.

அவரை அனைவரும் ‘ரெண்டு ரூவா டாக்டர் ’ என்றுதான் அழைப்பார்கள்.

அவர் இறந்த பிறகு என்ன செய்வதென்று திகைத்த மக்களுக்கு மீண்டும் அவரின் குடும்பம் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்களுக்கு மீண்டும் தன்னம்பிக்கை பிறந்துள்ளது.

”நாங்கள் அவரின் மருத்து சேவை முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உறுதியை ஏற்றுள்ளோம். இதற்காக எங்கள் குடும்பமே உழைக்க முற்பட்டிருக்கிறோம்.

நான் மற்றும் என் இரண்டு மகன்களும் இங்கிருக்கும் ஏழை மக்களுக்காக சேவை செய்ய என் கணவரின் சேவையைக் கையிலெடுத்திருக்கிறோம் “ என ஜெயச்சந்திரனின் மனைவி மருத்துவர் வேணி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். தற்போது குரோம்பேட்டை தனியார் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிகிறார்.

காலையில் மட்டும் கிளீனிக்கில் மருத்துவம் பார்க்கிறார். மாலையில் அவருடைய மகள்கள் சரவணா ஜெகன் மற்றும் சரத் ராஜ் இருவரும் மருத்துவம் பார்க்கின்றனர். கிளீனிக் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி என 12 மணி நேரம் செயல்படுகிறது.

”என் கணவர் இருந்த போது ஒரு நாளைக்கு 200 நோயாளிகள் வருவார்கள். ஆனால் தற்போது என்னதான் நாங்கள் அதே விலைக்கு மருத்துவம் பார்த்தாலும் அந்த அளவிற்கு நோயாளிகள் வருவதில்லை. ஒரு நாளைக்கு தோராயமாக 30 நோயாளிகள்தான் வந்து செல்கின்றனர் “ என்கிறார் வேணி.

ஜெயச்சந்திரன் மகன் சரத் ”என் தந்தையின் உடல் நிலை மோசமான பிறகே கடந்த வருடம் அக்டோபர் மாதம் மருத்துவம் பார்ப்பதை நிறுத்தினார். அதன் பிறகு டிசம்பர் மாதம் இறந்தார். நான் என் அப்பாவுடன் பல நாட்கள் உடன் இருந்து மருத்துவம் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் நான் உணர்ந்ததில்லை.

அவரின் இறுதி ஊர்வலத்தின் போது திரண்ட நூற்றுக் கணக்கான மக்களைப் பார்த்தபோதுதான் என் தந்தையின் மகத்தான சேவை எனக்குப் புரிந்தது “ என டைம்ஸ் ஆஃப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவர் சென்னை அரசு மருத்துவமனையின் உதவிப் பேராசியராக இருக்கிறார்.

”நாங்கள் வரும் நோயாளிகளிடம் பணம் வாங்குவது கிடையாது. உங்களால் முடிந்த மூன்று ரூபாயோ ஐந்து ரூபாயோ என் தந்தையின் முன் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டுவிடுங்கள் என்று சொல்லிவிடுவோம் “ என கூறுகிறார் சரத். அதேபோல் கிளீனிக்கிற்குத் தேவையான மருந்து மாத்திரைகளை தொண்டு நிறுவனங்கள் ஏழை மக்களுக்காக இலவசமாக வழங்குகின்றன.

ஜெயசந்திரன் மூன்று தலைமுறைகளைக் கடந்து இரண்டு ரூபாய் சேவைக்கு மருத்துவம் பார்த்துள்ளார். அவரின் இறுதி நாட்களான 2018 ஆண்டிலிருந்தான் பத்து ரூபாய் வாங்கினார். இவரின் மகத்தான சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் பழனிச்சாமி பாராட்டியுள்ளனர். அவரின் இறப்பிற்கும் வருத்தம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெங்கடாச்சலம் தெரு பழைய வண்ணாரப்பேட்டை கிளீனிக்கின், திரைச் சீலை என்றுமே மூடப்படாது என அங்கிருக்கும் மக்கள் பெருமையாகச் சொல்கின்றனர்.

Post a Comment

0 Comments