புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்



தோட்டக்கலைத் துறை மூலம் நடத்தப்படும் இலவச குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.  உமாமகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இளைஞர்களை ஊக்கப்படுத்த குறுகிய கால தொழில் நுட்பவியலாளர் பயிற்சி 66 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு 8 மணிநேர அளவில் தோட்டக்கலை அறிவியலில் பட்டப்படிப்பு பயின்று இத்துறையில் பணிபுரிந்துவரும் வல்லுநர்கள் மூலம் 500 பேருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. ரூ.1.14 கோடி நிதியில் இத்துறையின் கீழ் இயங்கிவரும் தோட்டக்கலை பயிற்சி மையங்கள் மற்றும் மகத்துவ மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்குடன் தோட்டக்கலை பயிர்சாகுபடி, தோட்டக்கலைச் செடிகள் உற்பத்தி, விதை உற்பத்தி, மலர்ச் சாகுபடி, பாதுகாக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்ச் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மற்றும் உர மேலாண்மை மற்றும் அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

பயிற்சி மையம்- மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம். 

மொத்தம் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை - 100.   

தகுதி: குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று18 வயதுக்கும் மேற்பட்ட விருப்பமுள்ள இளைஞர்கள் தாங்கள் விரும்பும் மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ள  இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி- தோட்டக்கலைத் துணை இயக்குநர், மத்திய தோட்டக்கலை பயிற்சி மையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர், காட்டுபுதுக்குளம், மனோகரன் சாலை, வேளாண்மை இணை இயக்குநர், அலுவலக பின்புறம், புதுக்கோட்டை மாவட்டம்.

Post a Comment

0 Comments