புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு



புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட  ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் நிகழாண்டுக்கான இருபாலர் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரலிசை, வயலின், மிருதங்கம், பரத நாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7-ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவும் வேண்டும்.
12 வயது முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. பயிற்சிக் கட்டணம் ரூ.152 ஆகும்.

அரசுச் சான்றிதழ் படிப்பான இப்பயிற்சியில், அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி வழங்க வாய்ப்புகளும் கிடைக்கும். இலவசப் பேருந்து சலுகை, தங்கும் வசதி மற்றும் கல்வி உதவித் தொகை ஆகியவை அரசு விதிகளுக்கு உள்பட்டு வழங்கப்படும். மேலும் மாணவர்களுக்கு சீருடை, காலணி, மிதிவண்டி அரசு விதிகளின்படி வழங்கப்படும். மாணவர்கள் அனைவருக்கும்  ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.400 வழங்கப்படும்.

எனவே, ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி, 1883, திலகர்  திடல், புதுக்கோட்டை என்ற முகவரியில் பள்ளித் தலைமை ஆசிரியரை நேரில் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04322-225575, 94861 52007 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

Post a Comment

0 Comments