இணையத்தில் வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தலாம்: தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டம் செப். 1 முதல் நடைமுறை



வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் புதிய திட்டம்  செப்டம்பர்  1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தத்  திட்டம் குறித்து, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலமாக, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக, என்விஎஸ்பி (NVSP) எனப்படும் தனித்த இணையதளம் மற்றும் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது.

இணையதளம் அல்லது செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து திருத்தங்களைச் செய்யலாம். இந்தத் திருத்தங்களுக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை, நிரந்தர  கணக்கு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றலாம்.

வரைவுப் பட்டியல் வெளியீடு: 

இணையம் அல்லது செயலியில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பாக வாக்குச் சாவடி நிலையிலான அலுவலர்கள் நேரில் கள ஆய்வு சென்று திருத்தங்களை உறுதிப்படுத்துவர். அதன்பின்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
வாக்காளர் வரைவுப் பட்டியலானது வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் உள்ள திருத்தங்கள், ஆட்சேபணைகளை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாக்காளர் தெரிவிக்கலாம். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

நான்கு நாள்கள் முகாம்: 

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்புத் திட்டம், அதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

அதன்படி நவம்பர் 2, 3 மற்றும் 9, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளன. முழுமையாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலானது வரும் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments