காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!!



காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ விலக்கிக் கொள்ளாவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டப்பிரிவுடன் 35ஏவையும் இணைத்து நீக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீரைச் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டமன்ற அந்தஸ்து அல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது, மத்திய அரசன் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு -காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்கச் சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தக்க திருத்தங்கள் மேற்கொண்டு, சட்டப் பிரிவு 370-இல் ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிராக பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்ததோடு இன்று 370ஐ விலக்கிக் மிகப்பெரிய ஜனநாயக படுகொலையைச் செய்துள்ளது.

இந்த 370 சட்டப் பிரிவு விலக்கிக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பின் போது காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களாக உமர் அப்துல்லா மற்றும் மஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் அடைத்து அவர்களை வெளியில் செல்ல அனுமதி அளிக்காமல் உள்ளது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமையும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்குச் சொத்து வாங்கும் உரிமை உண்டு. வெளி மாநிலத்தவர்களால் காஷ்மீரில் அரசு வேலை, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெற முடியாது. ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதையும், அவர்களுக்கு அளிக்கவேண்டிய உரிமையைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது.சமத்துவ, சம உரிமை பாதிக்காத வகையில் காஷ்மீர் மாநில அரசு அதன் சட்டப்பேரவையில் எந்த சட்டத்தையும் இயற்றிக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தைத் தரும் சட்டம் 35ஏவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் ஒரு சதுர அடி சொத்து கூட வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. அதற்குக் காரணமான அரசியல் சாசன சட்டம் 370 மற்றும் 35ஏ சட்டங்களை நீக்குவதன் மூலம், ஜம்மு காஷ்மீரைக் கொத்து கொத்தாகப் பலி கொடுத்து கார்ப்பேரட் முதலாளிகளுக்கு விருந்து வைக்கவும், காஷ்மீரில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை நிர்கதியாக்கியாக்கவே இந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியுள்ளது.

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே பாஜக அரசின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

மறைந்த பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் காஷ்மீர் மக்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நமது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கும் மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த நாள் “நமது நாட்டின் ஜனநாயகத்தின் கருப்பு நாளாகும்.”

ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த நமது நாட்டில் -ஜனநாயகத்தைப் படுகுழியில் வீழ்த்தும் மோடி அரசின் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு எழுந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து களம் காண வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Post a Comment

0 Comments