புதுக்கோட்டையில் ரூ.10 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்



புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை கருவிகளை துவக்கி வைத்து,
மருந்து நிறுவனங்களுக்கு பதிவு சான்றிதழ்களை வழங்கி, மனநல திட்டத்தின் சார்பில் மனநல வியாழன் திட்டத்தை துவக்கி வைத்தும் மற்றும் உலக மக்கள் தொகை தின விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (19.08.2019) பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் திரு.பி.கே.வைரமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்த இந்த வளாகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவசர சிகிச்சை பிரிவு, பொது நோயளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடன் இம்மருத்துவமனை செயல்பட்டு வந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது புதுக்கோட்டையில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு உயர்தர மருத்துவ சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டில் முன்மாதிரியாக முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன், நூலக வசதி, தினசரி நாளிதழ்கள் படிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், கோபால்ட் தெரபி, கேத்லேப் போன்ற பல்வேறு உயர் சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அறந்தாங்கி அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட 50 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன் கூடிய ஆயுஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

மனநல திட்டம் என்பது ஒரு முக்கியமான திட்டமாகும். தன்னை மறந்து மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றி திரிந்த 37 எண்ணிக்கையிலான ஆண், பெண்களை மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து அவர்களை சீர் செய்து, உரிய சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு சுயநினைவு வந்தவுடன், அவர்களது குடும்பத்தினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னதமான மனிதநேய பணியினை மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்பு தானத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதை போல, மனநல திட்டத்திற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் தற்கொலை எண்ணத்தை தடுக்கும் வகையில் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், அதனால் பல்வேறு விளைவுகள் ஏற்படும்.

எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மனநல மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை மக்கள் நலன் சார்ந்த சுகாதாரத் திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் அவர்கள் பேசினார்.

பின்னர் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள்திருமயம்  அரசு மருத்துவமனையில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.சந்திரசேகரன், மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.மலர்விழி, அடையார் புற்றுநோய் மருத்துவமனை துணைத்தலைவர் ஹேமந்ராஜ், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments