கோபாலப்பட்டினத்தில் குவிந்துகிடக்கும் குப்பைகள்..!! தொற்று நோய் பரவும் அபாயம்..!!!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் அதிகமான இடங்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றமும், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.
இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோபாலப்பட்டினத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குப்பைக்காக வைக்கப்பட்டுள்ள தொட்டியில் மக்கள் தினமும் குப்பை கொட்டி வருகின்றனர்.

குப்பைதொட்டியில் குப்பைகள் நிரம்பியவுடன் அதனை கண்காணித்து ஊராட்சி மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அகற்ற வேண்டும். ஆனால் கட்டுக்குளம்  பகுதி, சின்னபள்ளிவாசல் பகுதி, ஆலமரம் பகுதி மற்றும் பெரியபள்ளிவாசல் அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி ஐந்து நாட்களாகியும் அதனை அகற்றவில்லை. இதனால் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அந்த குப்பை தொட்டியில் குப்பைகளை போடுவதால் அது வெளிப்புறத்தில் பரவி அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது.


இப்படி கிடக்கும் குப்பைகளை ஆடு, மாடு,நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஊராட்சி நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: காட்டுகுளம்,ஆலமரம்,சின்னபள்ளிவாசல் பகுதி, பெரியபள்ளிவாசல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி ஐந்து நாட்கள் ஆகியும் அதனை ஏன் ஊராட்சி நிர்வாகம் அகற்றவில்லை என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் கொட்டும் குப்பைகள் காற்றில் பறந்து அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதாலும் கொசு அதிகமா உற்பத்தி இருப்பதால், அந்த பகுதியில் வசிப்போர் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இனியாவது ஊராட்சி நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

இதுகுறித்து GPM  மீடியா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சார்பாக ஒரு சில இடங்களில் இரும்பு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதில் சேரக்கூடிய குப்பைகளை இரண்டு நாளைக்கு ஒருமுறை அகற்றி வருகிறோம். மேலும் கோபாலப்பட்டினத்தில் அகற்றப்படும் குப்பைகள் அனைத்தும் மீமிசல் ஊராட்சியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஐந்து நாட்களாக குப்பை அள்ளும் ஊழியர்கள் விடுமுறையில் சென்றிருப்பதால் தற்பொழுது வரை குப்பை அகற்றாமல் இருக்கிறது என்றும் இன்று அல்லது நாளைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும் கோபாலப்பட்டினத்தை பொறுத்தவரையில் அகற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு ஊருக்குள் சரியான இடமில்லாத காரணத்தால் இரண்டு நாளைக்கு ஒருமுறை அகற்றப்படுகிறது என்றும் ஊருக்குள் ஒதுக்குபுறமாக கொட்டுவதற்கு இடம் கொடுத்தால் தினமும் குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

எனவே கோபாலப்பட்டினம் ஊர் ஜமாத்திடம் குப்பை கிடங்கு அமைப்பதற்கு பல முறை இடம் கேட்டு இதோ தருகிறோம் அதோ தருகிறோம் என ஒரு வருட காலங்கள் கடந்து விட்டன என தகவலையும் இந்த நேரத்தில் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எனவே ஊர் ஜமாத் நமதூரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் சில நோய் தொற்றுகளில் இருந்து நமதூர் மக்களை பாதுகாத்திட உடனடியாக நமதூரில் குப்பை கிடங்கு அமைத்திட ஊராட்சி நிர்வாகத்திற்கு சரியான இடம் ஒதுக்கி கொடுக்கும்படி GPM மீடியா சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: காட்டுகுளம், ஆலமரம், சின்னப்பள்ளிவாசல், பெரியபள்ளிவாசல் பகுதி மக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் வெளியே போட்டுவிட்டு செல்வதால் குப்பைகளை அகற்றக்கூடிய ஊழியர்கள் ஒரு சில நேரங்களில் இந்த குப்பையை எங்களால் அகற்றமுடியாது என  கூறினார்கள் என்ற தகவலை தெரிவித்தார். மேலும் அவுலியா நகர் பகுதி மக்கள் சரியான முறையில் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள் எனவே அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என ஊராட்சி தனி அலுவலர் அவர்கள் கூறினார்கள்.

மேலும் கடந்த ஜூன் மாத கிராமசபை கூட்டத்திலும், ஆகஸ்ட் மாத கிராமசபை கூட்டத்திலும் குப்பைக்கிடங்கு அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நமதூரில் குப்பைக்கிடங்கு அமைக்கும் பனி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்...!!!

காட்டுகுளம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகள் 



சின்னப்பள்ளிவாசல் பகுதி தனியார் பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் அருகாமையில் குவிந்திருக்கும் குப்பை..!!!



ஈத்கா மைதானம் (ஆலமரம்) பகுதி வீடுகளுக்கு அருகாமையில் சாலை மற்றும் வீட்டை சுற்றி கிடைக்கும் குப்பை.. 





புகைப்படம் உதவி: மஹாதீர் 

Post a Comment

0 Comments