ராமநாதபுரம் - கீழக்கரை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து: கீழக்கரை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி.!



ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் புதன்கிழமை அதிகாலை இருசக்கர வாகனமும் லாரியும் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராபிக் அகமது மகன் சுல்தான்செய்யது இப்ராஹிம் (21). வாகன ஓட்டுநர். கீழக்கரை சாலைத் தெருவைச் சேர்ந்தவர் ஜகுபர்சாதிக். இவரது மகன் அப்ரிதீன் (21). இவர் ராமநாதபுரம் வைகை நகரில் தங்கியுள்ளார்.

சுல்தான்செய்யது இப்ராஹிம், அப்ரிதீன் இருவரும் நண்பர்கள். செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் வந்துவிட்டு நள்ளிரவில் மீண்டும் கீழக்கரைக்கு திரும்பியுள்ளனர். வாகனத்தை சுல்தான்செய்யது இப்ராஹிம் ஓட்டியுள்ளார்.

அவர்கள் திருப்புல்லாணி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது தூத்துக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற சரக்கு லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேராக மோதின. இதில் பலத்த காயமடைந்த சுல்தான்செய்யது இப்ராஹிம், அப்ரிதீன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் உருக்குலைந்து கிடந்தது.

தகவல் அறிந்த திருப்புல்லாணி காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

லாரி ஓட்டுநர் புதுக்கோட்டை வ.ரெட்டியபட்டியைச் சேர்ந்த சொரிமுத்து (28) திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர். 

விபத்தில் உயிரிழந்த இரு வாலிபர்களும் மது அருந்தியிருந்தார்களா என்பது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments