இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு – துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை!



சமூக வலைதளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சமீப காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அதிகரித்தபடி உள்ளன. இது வளைகுடாவில் பணிபுரிந்து வரும் இந்துத்வா கொள்கையளர்களிடம் அதிகம் காணப்படுகின்றன.

முன்பெல்லாம் இது அதிக கவனம் பெறாத நிலையில் இவ்விவகாரம் தற்போது வளைகுடாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக வளைகுடாவில் பலரும் சட்டப்படியான நடவடிக்கைகளை சந்தித்து வருகின்றனர்.

பிரதமரும் இதனை சுட்டி, கொரோனாவுக்கு மதம் கிடையாது, என்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதரும், மதத்தை சுட்டி சமூக வலைதளங்களில் பதிவது ஏற்புடையதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போனது.

மேலும் வெறுபூட்டும் பதிவுகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் போன்றவை நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கின.

இந்நிலையில் ஷார்ஜாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் சமையற் கலைஞராக பணிபுரியும் ராவத் ரோஹித் மற்றும் சச்சின் கினோகில் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிந்த இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக அந்நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை அந்த ரெஸ்டாரெண்ட் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும் இவர்கள் துபாய் சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல துபாயில் விஷால் தாக்கூர் என்பவரும் சமூக வலைதளங்களில் பல தடவை இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் பதிந்துள்ளதாகவும், இதனை அடுத்து விஷால் தாக்கூரும் அவர் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments