சீனாவில் தொடக்கப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து.! குழந்தைகள் உள்பட 39 பேர் காயம்.!!



சீனாவில் பாதுகாப்பு காவலர் ஒருவர் கத்தியால் குத்தியதில் குழந்தைகள் உள்பட சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர்.


சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தென் சீனாவில் வாங்ஃபு பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் இன்று ஒரு கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை பள்ளியில் கத்தியுடன் நுழைந்த 50 வயதான லி ஜியோமின் என்ற பாதுகாப்பு காவலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் குழந்தைகள் உள்பட 39 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளியின் தலைமையாசிரியரும் இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவ ஆரம்பித்த பிறகு காவல்துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளி லி என்பவரை கைது செய்துள்ளனர். 

இந்த தாக்குதலில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வேலையில் அதிருப்தி அடைந்தவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். 

இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள பள்ளி ஒன்றில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதே போல் 2018ம் ஆண்டு 28 வயதான நபர் ஒருவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 9 குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் பள்ளிகளில் கத்திக்குத்து நடைபெறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments