புதுக்கோட்டையில் ரூ.7.15 லட்சம் கள்ளநோட்டு.! காய்கறி மார்க்கெட்.! போலீசில் சிக்கிய 3 ஆசாமிகள்!!



புதுக்கோட்டையில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.7.15 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை கீழ.3-ம் வீதியில் உள்ள பெருமாள் கோயில் காய்கறி மார்க்கெட்டில் நேற்று காய்கறி வாங்க காரில் வந்த ஒரு நபர் 2000 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்து காய்கறி வாங்கி கொண்டு அதற்கான மீத தொகையையும் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.

பின் அந்த காய்கறி கடையின் உரிமையாளர் அந்த நோட்டை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டு பார்த்தபோது அது கள்ள நோட்டு என தெரியவந்தது. இதுகுறித்து காய்கறி கடையின் உரிமையாளர் வாடிக்கையாளர் வந்த கார் என் பதிவோடு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே இன்று காலை புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் புகாரில் தெரிவிக்கப்பட்ட அதே எண் கொண்ட கார் வந்ததை கண்ட போலீசார் அந்த காரை மறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் நேற்று காய்கறிக்கடை வியாபாரியிடம் கள்ளநோட்டு மாற்றிய நபர் என்பது தெரியவந்தது.


இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது அவர் புதுக்கோட்டை கேஎல்கேஎஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜன் என்பதும் அவரும் காந்தி நகரைச் சேர்ந்த வேலு, பனையப்பட்டியை சேர்ந்த பழனியப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து புதுக்கோட்டை காமராஜபுரத்தில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7.15 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், 700 ரூபாய் நோட்டுகள், ஒரு கம்ப்யூட்டர், ஒரு பிரிண்டர், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் இருவருக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த மாதம் டாஸ்மாக் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 65 லட்சம் பறிமுதல் செய்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதுக்கோட்டையில் இன்று 7.15 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 65 லட்சமும் இன்று 7.15 லட்சமும் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments