வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம் உள்ளது: மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு



வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956 தமிழர்களை அழைத்து வருவதற்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 47,000 பயணிகளில், 13429 மட்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்... இன்னும் 27,956 பேரை அழைத்து வர வேண்டியுள்ளது. அதற்கு 158 விமானங்கள் இயக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், விமானங்கள் தரையிறங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

கடந்த மே 15-ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை 79 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்ட்டர்ட் விமானங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வெளிநாடுகளில் இந்திய குடிமக்கள், சாலைகளிலும், பூங்காக்காலிலும் தூங்குகின்றனர் நிலை உள்ளது”. எனத் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், “தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறு. ஒரு நாளைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகிறது. அதில் வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டியுள்ளது. கூடுதல் விமானங்கள் இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்”. என தெரிவித்தார்.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், “வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கிறேன், அதன் மூலம் தீர்வு காண முடியும்” எனக் கூறி அவகாசம் வழங்க கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

அன்றைய தினம், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 27,956 தமிழர்களை அழைத்து வர என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும், நேர்மறையான தீர்வை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments