அன்னவாசல் அருகே குளத்தில் மூழ்கி தந்தை- மகன் பலி: 15 மணி நேரத்திற்கு பின்னர் சிறுவனின் உடல் மீட்பு.!



புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 40). இவரது மகன் முகமதுசாலிக்(9). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை சித்தன்னவாசல் அருகே உள்ள பணங்குடி மலையடி குளத்திற்கு குளிக்க சென்றனர்.


அப்போது குளத்தில் மூழ்கி அவர்கள் இறந்தனர். அவர்களை தேடி வந்த உறவினர்கள், தண்ணீரில் சாகுல்அமீதின் உடல் மிதந்ததை கண்டு, அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து, சாகுல்அமீதின் உடலை மீட்டனர். ஆனால் இரவு நேரம் ஆனதாலும், மழை பெய்ததாலும் முகமதுசாலிக்கின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வந்து, குளத்திற்குள் இறங்கி முகமதுசாலிக்கின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு சிறுவனின் உடல் குளத்தில் மீட்கப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கு பின்னர் முகமது சாலிக்கின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முகமது சாலிக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments