புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்.!



பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 265 சத்துணவு அமைப்பாளர், 552 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், நகராட்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 24-ந் தேதி முதல் நேற்று வரை அந்தந்த அலுவலகங்களில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பித்தனர். கடைசி நாளான நேற்றும் கூட்டம் அலைமோதியது.

விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி அலுவலகங்களிலும் என மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பபடிவங்களை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணி இன்று(அதாவது நேற்று) இரவு வரை நடைபெறும். அதன்பின் தான் முழு எண்ணிக்கை தெரியவரும். சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி குறைவாக இருந்தாலும் பட்டதாரி பெண்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்“ என்றார்.

இந்த பணிக்கு விண்ணபிக்க நேற்று கடைசி நாள் என்பதால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் விண்ணப்பம் செய்தவர்கள் ஜெராக்ஸ் கூட எடுக்க முடியாமல் தவித்தனர். இதேபோல, தபால் துறையில் வேலைக்கான பணிக்கும் விண்ணப்பம் செய்வதற்கு நேற்று கடைசிநாள் என்பதால் அதற்கு விண்ணப்பம் செய்தவர்களும் மின் தடையால் அவதிக்குள்ளாகினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments