புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம்.!



தமிழகத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளித்து வருகிறது.

பாசன நீர் வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, விவசாயிகள் நுண்ணீர் பசானமுறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ், நுண்ணீர்ப்பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர்ப்பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, குழாய்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும் நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவவும், தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலைநீர் மேலாண்மைப் பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத தொகை, ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத தொகை எக்டேருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி நிறுவுவதற்கு, அதற்காகும் செலவில் 50 சதவீத தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்திற்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது. 

மேற்கண்ட பணிகளுக்கான மானியம், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம். இந்த தகவலை உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments