கோவையில் அடுத்தடுத்து சம்பவம்: ஒரே நாளில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை.. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு.!!





                ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கோவையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த விபரீத சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரது மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும், வர்ஷன் (வயது 5) மகனும் உள்ளனர். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கணினி பழுது பார்க்கும் மையம் நடத்தி வந்தார். ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதை அவருடைய மனைவி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. இதனால் அவருடைய மனைவி சுகன்யா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் தாயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜீவானந்தம் தனது தொழில் பங்குதாரர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். அதில் 20 ஆயிரம் பணத்தை மொத்தமாக இழந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தனது செல்போனை வீசி எறிந்து உடைத்துள்ளார். இதையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோல் கோவை சுந்தராபுரம் மாச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32). தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். ஜெயச்சந்திரன் பெற்றோர் இறந்ததை அடுத்து, அவரது உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயச்சந்திரனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடைபெறாத நிலையில் தனிமையில் வசித்து வந்த இவர், பொழுதுபோக்கிற்காக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஏற்கனவே கடன் தொல்லை இருந்த நிலையில், ஆன்லைன் ரம்மி மூலமும் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலம் கடன் வாங்கியதாகவும், அதற்கான தொகையை மாதா,மாதம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயச்சந்திரன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் கடந்த சில தினங்களில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் போத்தனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 வாலிபர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments