உத்தரபிரதேசத்தில் கோவில் பூசாரி உள்பட 3 பேரால் அங்கன்வாடி பெண் ஊழியர் கற்பழித்து கொலை...



உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் கடந்த சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த மாநிலத்தில் 50 வயது அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் கோவில் பூசாரி உள்பட 3 பேரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். அந்த மாநிலத்தின் புடவுன் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றிருந்தார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அந்த பெண்ணின் மகன் அவரை தேடினார். 

இந்த நிலையில் கோவில் பூசாரி உள்பட 3 பேரும் அந்த பெண்ணின் உடலை தூக்கிக்கொண்டு அவரது வீட்டிற்கு வந்தனர். தாய் பிணமாக கொண்டு வரப்பட்டதை கண்டு அந்த பெண்ணின் மகன் அதிர்ச்சியில் உறைந்தார். அவரிடம், உங்கள் தாய் கோவில் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறிவிட்டு 3 பேரும் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். 

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்ணின் மகன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருந்ததும், அவரது ஒரு காலும் முறிந்து இருந்ததும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் கோவில் பூசாரி உள்பட 3 பேரும் தான் அந்த பெண்ணை கற்பழித்து கொன்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து கோவில் பூசாரியின் உதவியாளர்கள் 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பூசாரி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக உள்ளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments