திருவாரூர்- பட்டுக்கோட்டை- அறந்தாங்கி - காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் !




திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் !

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை க்கான விரைவு இரயில்சேவை 2006ல் நிறுத்தப்பட்டது.

அகல இரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான இரயில் சேவை துவங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் இரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில் துவங்கவேண்டி மத்திய இரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயலை இன்று 10/02/2021 மாலை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்,
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ்கனி ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறந்தாங்கி வட்ட இரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் ஏ.பி. இராஜ்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். ஷிகாபுதீன் ஆகியோர் இரயில்வே போர்டு சேர்மன் சுனித் ஷர்மா அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல ரயில் பாதையில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு போதுமான கேட் மேன்களை நியமனம் செய்ய வேண்டும், மீட்டர் கேஜ் இரயில் பாதையில் இயங்கிய சென்னை-காரைக்குடி இரவு நேர விரைவு இரயிலை இயக்க வேண்டும், மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி வரையிலும் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மதுரை வரை பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும், இரயில்வே நிர்வாகம் இயக்கிட திட்டமிட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு இரயில்களை இயக்க வேண்டும், இத்தடத்தில் விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் சரக்கு இரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.




கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட இரயில்வே அமைச்சர் மற்றும் இரயில்வே போர்டு சேர்மன் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments