கொரோனா கையேடு: வீட்டுத்தனிமையில் இருப்போர், அவர்களை கவனிப்போருக்கான வழிகாட்டுதல்கள்!




கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தும் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக, அறிகுறிகளற்ற மற்றும் அறிகுறிகள் குறைவாக இருக்கும் நபர்களுக்கு வீட்டுத்தனிமை பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், தீவிர பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் போகும் நிலை முடிந்தவரை தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

வீட்டுத்தனிமை என்று சொல்லிவிட்டாலும், அவர்களும் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களே. இவர்கள் நோயிலிருந்து மீளவும் நோயை மேலும் பரப்பாமல் இருக்கவும் சில வழிமுறைகள் இருக்கின்றன. சுகாதாரத் துறை வழிகாட்டும் அந்த வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

முதல் விஷயம், அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் நோயாளியை பார்த்துக்கொள்ள பராமரிப்பாளர் இருக்க வேண்டும். அப்படியானவர்கள்தான், வீட்டுத்தனிமையை நாட வேண்டும். பராமளிப்பாளர் இல்லையெனில், கோவிட் கேர் சென்டரை நாடுவது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, அதற்கேற்ப முடிவெடுங்கள்.இப்போது நெறிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு...

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, குறிப்பாக வயது முதிர்ந்தோர், உயர் ரத்த அழுத்தம் - இதய நோய் - சிறுநீரக நோய் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களிடம் இருந்து நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நிச்சயம் தனி அறையில் தங்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் அனைவருடனும், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நோய் குணமாகும் வரை, வீட்டில் மற்றவர்கள் உபயோகிக்கும் பாத்திரங்கள், துணிகளை உபயோகிக்கக் கூடாது. வீட்டுக்குள் இருக்கும்போதும், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

தெரியவரும் ஒருசில அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும் வழிகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, நிறைய தண்ணீர் குடிப்பது; மருத்துவர் ஆலோசனையில் வைட்டமின் மாத்திரைகள் - இருமல், தும்மலை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே இருந்தாலும், தொடர் மருத்துவ ஆலோசனை அவசியம். பராமளிப்பாளரோடும் இருபத்தி நான்கு மணி நேரமும் தனிமனித இடைவெளியுடன் கூடிய தொடர்பிலேயே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒருவேளை அறிகுறிகள் அதிகமானால், உடனடியாக மருத்துவரிடம் சொல்லி, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியும்.

உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி உதவியுடன், அடிக்கடி வெப்பநிலையை பரிசோதிக்கவும். மேலும் உடலில் ஆக்சிஜன் அளவை ஆக்சிமீட்டர் கொண்டு பயன்படுத்தும் வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு, அதையும் தினமும் வீட்டிலேயே பரிசோதிக்கவும். இந்த அளவு சீரற்று செய்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். 5 நாள்களுக்கும் மேலாக வறட்டு இருமல், காய்ச்சல் போன்றவை தெரியவந்தால், மருத்துவரை அணுகவும்.

ஒருவேளை நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர், இதய நோய் - ரத்த அழுத்தம் போன்ற சிக்கல் இருப்பவர், நுரையீரல் - சிறுநீரகம் - கல்லீரம் சார்ந்த சிக்கல் இருப்பவர், உடல் பருமன் உள்ளவர், நோய் எதிர்ப்பு திறன் சார்ந்த சிக்கல் இருப்பவர் என்றால், தனிமைப்படுத்தலின்போது மிக மிக கவனமாக இருங்கள். எந்தவொரு அசௌகரியம் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுவிடுங்கள்.

நல்ல காற்றோட்டமுள்ள அறையில்தான் நோயாளி தங்கவேண்டும்.
மூன்றடுக்கு முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். எட்டு மணி நேர பயன்பாட்டுக்குப் பின்னரோ அல்லது முகக்கவசம் அழுக்கானாலோ, ஒரு சதவீத சோடியம் ஹைப்போகுளோரைட்டின் மூலம் கிருமிநாசம் செய்த பின்னர் அதை அப்புறப்படுத்தவும்.
நோயாளிகள் நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க நிறைய திரவங்களைப் பருக வேண்டும்.

அடிக்கடி கைகழுவ வேண்டும். கைகழுவும்போது, குறைந்தது 40 நொடிகளுக்கு சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
அறையில் உள்ள அடிக்கடித் தொடக்கூடிய இடங்களை, அதாவது மேஜையின் மேற்புறங்கள், தாழ்பாள், கைப்பிடிகள் போன்றவற்றை ஒரு சதவீதம் ஹைப்போக்குளோரைட் திரவத்தால் சுத்தப்படுத்தவும்.
ஆக்சிஜனுக்கு எளிய பயிற்சி:

உடலில் ஆக்சிஜன் அளவை அறிய ஆக்சிமீட்டரில் பரிசோதிக்கும்போது, 94 சதவிகிதத்துக்கும் குறைவாக காண்பித்தால், நீங்கள் எளிய பயிற்சியை செய்யலாம். இந்தப் பயிற்சிக்கான வழிமுறைகள் ஒவ்வொன்றையும், 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பின்பற்றுங்கள். படத்தில் காட்டியிருக்கும் பொசிஷன்களை மனதிற்கொண்டு, இந்தப் பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்


1) முதலில் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் குப்புறப்படுத்துக் கொள்ளுங்கள்; வயிறுப்பகுதிக்கு மட்டும் கூடுதல் அழுத்தம் கிடைக்குமாறு படுக்கவும்.
 
2) அடுத்து 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் படுக்கையில் வலதுபக்கம் உடலை சாய்த்துக்கொண்டு, வலது கையை தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு படுக்கவும்.

3) பின்னர், 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் உள்ளதுபோல் முதுகை சற்றே - அதாவது 30 முதல் 60 டிகிரி வரை சாய்த்துக் கொண்டு, கால்களை நேராக நீட்டி அமரவும்.

4) அதன்பின் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படுக்கையில் இடதுபக்கம் நோக்கி உடலை சாய்த்துக்கொண்டு, இடதுக்கையை தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு படத்தில் காட்டியவாறு படுக்கவும்.

5) ஐந்தாவதாக, 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை, படத்தில் காட்டியவாறு குப்புறப்படுத்து, வலதுகாலை சற்று மேல்நோக்கி செங்குத்தாகவும், வலதுகையை மேல்நோக்கி உயர்த்தியும் படுக்கவும். இதைசெய்யும்போது இடதுபுற கை மற்றும் கால், நேராக இருக்க வேண்டும்.

6) ஆறாவதாக, மீண்டும் முதல் நிலையிலிருந்து ஒவ்வொன்றாக பின்பற்றுங்கள். ஒருவேளை, 92 சதவிகிதத்துக்கும் குறைவாக ஆக்சிமீட்டரில் வந்துவிட்டால், உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

பராமரிப்பாளர்கள் கவனத்துக்கு...

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கென எப்படி நெறிமுறைகள் உள்ளதோ, அதுபோலவே அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தை பராமரிப்பு அளிப்பவர்களும் அணிய வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும்போது 'என்95' முகக்கவசம் அணிய வேண்டும்.

முகக்கவசத்தின் முன் பகுதியை கைகளால் தொடவோ, கையாளவோ கூடாது.
வியர்வை காரணமாக முகக்கவசம் ஈரமானாலோ அல்லது அழுக்கானாலோ, அதை உடனடியாக மாற்ற வேண்டும். பயன்படுத்திய பின் முகக்கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும். அதன் பிறகு கையை சுத்தப்படுத்தவும்.
முகம், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர், அவர் அமர்ந்திருக்கும் இடம், அவர் அடிக்கடி தொடும் இடம் போன்றவற்றோடு தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக கையை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உணவு தயாரிப்பதற்கு முன் பின், சாப்பிடுவதற்கு முன் பின், கழிவறையைப் பயன்படுத்தியதற்கு பின் மற்றும் எப்போதெல்லாம் கைகள் அழுக்காக தென்படுகிறதோ, அப்போதெல்லாம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
சோப் மற்றும் தண்ணீரை பயன்படுத்திய பின்னர், கைகளைத் துடைப்பதற்கு டிஷ்ஷூ பேப்பரை பயன்படுத்துதல் சிறந்தது.

நோயாளியுடன் இருக்கும்போது, நோயாளியின் எச்சில், வியர்வை, மூச்சுக்காற்று போன்றவை உங்களை வந்தடையாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
நோயாளியைக் கையாளும்போது, தூக்கி எறியக்கூடிய கையுறைகளைப் பயன்படுத்தவும். கையுறைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் கைகளை சுத்தப்படுத்தவும்.

தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ள பொருள்களை நோயாளி இருக்கும் சுற்றுப்புறத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உதாரணத்துக்கு உணவுப் பாத்திரங்கள், உணவு வகைகள், பானங்கள், உபயோகப்படுத்தியத் துண்டுகள் அல்லது மெத்தை விரிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

நோயாளியை கவனித்துக்கொள்பவர், மது - புகை பயன்படுத்தாமல் இருக்கவும்.
நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை கையுறை அணிந்துகொண்டு சோப் - டிடர்ஜெண்ட் உபயோகப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை மறுபடியும் பயன்படுத்தலாம். கையுறையை அப்புறப்படுத்திய பின்னரும், பயன்படுத்திய பொருள்களைக் கையாண்ட பின்னரும் கைகளை சுத்தப்படுத்துங்கள்.

வெளிப்பரப்புகளை சுத்தப்படுத்தும்போதும், நோயாளி பயன்படுத்திய துணிகள் அல்லது மெத்தை விரிப்பை துவைக்கும்போதும் மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தையும், தூக்கி எறியக்கூடிய கையுறைகளையும் பயன்படுத்தவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments