கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த கறம்பக்குடி மாணவிக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டு!



கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த கறம்பக்குடி 10-ம் வகுப்பு மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த மாணவி நேரடியாக வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகி நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த லட்சுமணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மகள் கவுரி. எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். அவர் சிறு வயது முதலே கிராமப்புற வளர்ச்சி குறித்து தகவல்களை திரட்டி வருகிறார். ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய பாரம்பரியத்தையும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளார்.

குறிப்பாக எங்கள் பகுதியில் உள்ள கிராம தெருக்கள், அதன் பாரம்பரியம் குறித்தும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ஏரி, குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்த அப்பகுதி மக்கள் குழுவை உருவாக்குவது குறித்தும் அவர் விரிவாக ஆய்வு நடத்தி இருக்கிறார். அதன்பேரில் அவர் கிராம புள்ளிவிவர பதிவை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த கிராம புள்ளிவிவர பதிவை கிராம ஊராட்சிகள் மற்றும் வார்டுகள் வாரியாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் மாவட்ட கலெக்டர் போல கிராம கலெக்டர் என்ற ஒரு பதவியை ஒவ்வொரு ஊராட்சியிலும் கொண்டு வர உத்தரவிட வேண்டும். எனது மகள் உருவாக்கிய தேசிய கிராமப்புற மேம்பாட்டு ஆய்வறிக்கை நூலை 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும். 

அவ்வாறு சேர்க்கப்படும்பட்சத்தில் இது, ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்கும். எனவே எனது மகள் உருவாக்கிய இந்த 3 திட்டங்களையும் அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி, தனது ஆய்வுகள், புள்ளி விவர பதிவு குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார். சுமார் அரை மணி நேரம் மாணவியிடம் பல்வேறு தகவல்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

பின்னர், அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். அவரது ஆய்வின் அடிப்படையிலான புள்ளிவிவர பதிவுகளை தேசிய அளவில் அமல்படுத்தலாம். முதல்கட்டமாக மாணவியின் கிராமத்தில் அமல்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் இன்னும் சில தகவல்களை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments