புதுகை மாவட்டத்தில் இதுவரை மழையினால் 561 எக்டேர் பயிர்கள் சேதம்! காப்பீடுக்கு 72 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பம்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 561 எக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பா சாகுபடியில் காப்பீடுக்கு 72 ஆயிரம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி முதல் வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை தினமும் பரவலாகவும், அவ்வப்போது கன மழையாகவும், பலத்த மழையாகவும் பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதோடு, விவசாய பணிகளும் அதிக அளவில் நடைபெற்றன. சம்பா நெல் சாகுபடிக்கு அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டனர்.

இந்தநிலையில் தொடர் மழையினால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக வயல்கள் தண்ணீரில் மூழ்கியதில் நெற்பயிர்கள் நாசமாகின. சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட நாற்றுகள் மூழ்கி போகின. உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களும் சேதமடைந்தன.

மாவட்டத்தில் இதுவரை பெய்த மழையினால் நெல், கடலை, உளுந்து உள்பட 561 எக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சேதம் கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் சேதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு அரசு தரப்பில் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாய சங்க மூத்த தலைவர் தனபதி கூறுகையில், மாவட்டத்தில் தொடர் மழையினால் தினை, குதிரைவாலி, சாமை, மக்காச்சோளம் உள்பட சிறுதானிய பயிர்கள் மழையால் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில் சம்பா நெல் சாகுபடிக்கு பயிர் காப்பீடுக்கு விண்ணப்பம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் மாவட்டத்தில் 76 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 72 ஆயிரம் எக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மொத்தம் 72 ஆயிரம் விவசாயிகள் பயிா் காப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments