வடகிழக்குப் பருவமழை பாதிப்பு: தயார் நிலையில் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்




வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான கருவிகளுடன் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் இ.பானுபிரியா கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் உள்ளது. இங்கு, தேவையான கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் நீர்நிலைகளில் குளிக்கச் செல்ல வேண்டாம். குளம், குட்டைகளில் வேடிக்கை பார்க்கச் செல்வது, செல்ஃபி எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 20 கமாண்டோ வீரர்கள் உள்ளனர். இவர்கள், அனைவரும் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அளவுக்குப் பயிற்சி பெற்றவர்கள். மேலும், தேவையான கருவிகளும் உள்ளன.

மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 101, மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு 1070, மாவட்டப் பேரிடர் கட்டுப்பாட்டு அறை எண் 1077க்குத் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments