தனியார் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்: அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி!



தனியார் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 என்ற எண்கள், இடம் பெற்று இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அங்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் எண்ணையும் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.

வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது. அனைத்து இடத்திலும் உளவியல்ரீதியாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. இதற்கென உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டந்தோறும் ஆலோசகர்கள் நியமிக்க சென்னையில் நடந்த மாவட்ட அலுவலர்களுடனான கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்குவார்கள். 14417 புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து நாளை (இன்று) சென்னையில் ஆய்வு செய்ய உள்ளேன்.

மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் அளிக்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாணவர்களை தக்க வைத்து கொள்ள வேண்டியது அரசின் விருப்பம். தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழுகட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments