ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு




ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் அறிவித்துள்ளது.

இலவச பயிற்சி

தமிழக அரசின் தலைமை செயலாளரும், பயிற்சித்துறை தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) குடிமைப்பணி (சிவில் சர்வீசஸ்) முதல்நிலைத்தேர்வை அடுத்த ஆண்டு (2022) ஜூன் 5-ந்தேதி நடத்துகிறது.

இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்காக தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி நிலையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் இலவச பயிற்சியினை அளிக்க உள்ளது.

இதில் சென்னை, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப்பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, சத்தான உணவு மற்றும் தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சி மையம் 225 முழுநேரத்தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதேபோன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப்பயிற்சி நிலையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத்தேர்வர்களை முதல்நிலை தேர்வுக்காக அனுமதிக்கின்றன.

2022-ம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு நடத்தும் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுதுவதற்கு, பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப்பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 11-ந்தேதி (இன்று) முதல் வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வு

இப்பயிற்சி மையங்களில் ஏற்கனவே முதல்நிலை தேர்வுக்கு முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், பயிற்சியில் சேர விரும்புவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக்குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தகுதியுடையவர்கள் 23.1.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments