25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.




டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது,  தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என தெரிவித்துள்ளார்.

அப்போது மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதே தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துவந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும், பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த முறை அரையாண்டுத் தேர்வு நடைபெறவில்லை. வழக்கமாக, அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு, மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி, விடுமுறை அளிக்கப்படும். இந்த முறை தேர்வு நடைபெறாததால், விடுமுறை எப்போது விடப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாள்கள் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments