நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றகோட்டைப்பட்டினம் மீனவர் கடலில் தவறி விழுந்து பலி



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் வன்னிச்சி ஏந்தல் பகுதியை சேர்ந்தவர் தவசிமணி (வயது 52). இவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் நாட்டுப் படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் தனது நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார். மீன் பிடித்துக்கொண்டு வழக்கம்போல் நேற்று காலை இவர் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் வெகுநேரமாகியும் இவர் கரை திரும்பவில்லை. 

இந்நிலையில் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதிக்கு நேராக  3 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஒரு படகு மட்டும் ஆட்கள் யாருமில்லாமல் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதனை கட்டி இழுத்து கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர்.
தேடும் பணி 
பின்னர் இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் படகு யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த படகு கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த தவசிமணி சென்ற படகு தான் என்பது தெரியவந்தது. 
படகில்  தவசிமணி இல்லை. இதனால் மீன்வளத் துறையினர், கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் காணாமல் போன தவசி மணியை படகு மூலம் தீவிரமாக தேடி வந்தனர்.

மீனவர் உடல் மீட்பு 
இந்நிலையில் நேற்று மாலை புதுக்குடி அருகே கடல் பகுதியில் ஒரு சடலம்  மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் அது குறித்து கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மீனவர்களின் உதவியுடன் கடலோர காவல் குழுமத்தினர் நடுக்கடலில் மிதந்த சடலத்தை கைப்பற்றி பார்த்தபோது அது கடலில் தவறி விழுந்து காணாமல் போன தவசி மணி என்பது தெரியவந்தது.   இதனையடுத்து கடலோர காவல் குழும போலீசார்  அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் தவறி விழுந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments