புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து-கலெக்டர் தகவல்




புதுக்கோட்டையில் 1,356 மையங்கள் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


போலியோ சொட்டு மருந்து

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் கவிதா ராமு நிருபர்களிடம் கூறியதாவது:-

போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் ஒரே சமயத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதின் மூலம் போலியோ நோய் கிருமிகள் பரவுவதை தடுத்து, போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க முடியும். அந்த வகையில் வருகிற 27-ந் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

1,356 மையங்கள்

போலியோ சொட்டு மருந்து முகாமை புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடத்தும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை மூலம் போலியோ சொட்டு மருந்து முகாமினை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1,309 மையங்களும், நகர பகுதிகளில் 47 மையங்களும் என மொத்தம் 1,356 மையங்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 490 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணியை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கென பொது சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 5 ஆயிரத்து 377 பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாடோடி மக்கள்

சத்துணவு மையங்கள், பள்ளிகள், துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், நகராட்சி மகப்பேறு மையங்கள், நகராட்சி மருந்தகங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் மேலும் நாடோடி மக்கள் மற்றும் வேலை நிமித்தமாக மற்ற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ள மக்கள் இருக்கும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து, அன்று பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை அனைவருக்கும் வழங்கப்படும். மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதுடன் இளம்பிள்ளைவாத நோய் இல்லா உலகம் படைக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments