கொளுத்திய வெயில்... மர நிழலில் ஓய்வெடுத்த மூவர் - கார் மோதி ஒருவர் பலியான சோகம்!




விராலிமலையிலிருந்து, புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று சத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மர நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூவர் மீதும் கடுமையாக மோதியது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகேயுள்ள கோத்திராப்பட்டி சரளப்பட்டியைச் சேர்ந்தவர் பொய்யான் (50). இவர் மனைவி செல்லம் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (53). இவர்கள் பொய்யானின் மகனுக்குப் பெண் பார்ப்பதற்காக இலுப்பூரிலிருந்து டூ வீலரில் புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அன்னவாசல் அருகே சத்திரம் சாலையில் வந்தபோது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், களைப்படைந்த மூன்று பேரும் சாலையோரத்தில் உள்ள மர நிழலில் டூ வீலரை நிறுத்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தனர். அப்போது விராலிமலையிலிருந்து, புதுக்கோட்டை நோக்கி வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மர நிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மூவர் மீதும் கடுமையாக மோதியது. இதில், தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த பொய்யான், அவர் மனைவி செல்லம் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்த அன்னவாசல் போலீஸார், தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இது குறித்து அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். வெயிலுக்கு ஓய்வெடுத்தபோது, எதிர்பாராதவிதமாக கார் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments