சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்து: நடைமேடையில் ஏறிய மின்சார ரெயில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு




சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்து: நடைமேடையில் ஏறிய மின்சார ரெயில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி கடையின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்சார ரெயில் போக்குவரத்து

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறநகர் பகுதியில் இருந்து மின்சார ரெயில் போக்குவரத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

குறைந்த கட்டணம், விரைவான பயணம் என்ற அடிப்படையில் பெரும்பாலானவர்கள் மின்சார ரெயிலையே விரும்புகிறார்கள். இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

கடற்கரை ரெயில் நிலையம்

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கமாகவும், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 4.50 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் புறப்பட இருந்தது.






இதற்காக மாலை 4.25 மணி அளவில் கடற்கரை பணிமனையில் இருந்து 1-வது நடைமேடைக்கு 12 பெட்டிகள் கொண்ட நவீன ‘3 பேஸ்’ மின்சார ரெயில் எடுத்து வரப்பட்டது.

நடைமேடையில் ஏறியது

இந்த ரெயிலை கேரளாவை சேர்ந்த பவித்ரன் என்பவர் இயக்கி வந்தார். ரெயில் நிலையத்துக்கு உள்ளே வந்த மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியது. தொடர்ந்து நடைமேடை 1-ன் தொடக்கத்தில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நிற்காமல் கடையை உடைத்து கொண்டு உள்ளே சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் சத்தத்துடன் புழுதி கிளம்பி பெரும் புகை மூட்டமாக காட்சி அளித்தது.

இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். 2 கடைகளின் மீது மோதிய பின்னர் அங்கிருந்த கட்டிட சுவரின் மீது மின்சார ரெயில் மோதி நின்றது.

ரெயிலில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மின்சார ரெயிலின் என்ஜின் பெட்டியும், அடுத்திருந்த பெட்டியும் என 2 பெட்டிகள் மட்டும் இந்த விபத்தில் பெரும் சேதத்துக்கு உள்ளாகி தடம்புரண்டன.

அதிகாரிகள் ஆய்வு

இதில் என்ஜின் பெட்டி 2 கடைகளின் இடிபாடுகளுக்கு மேல் சென்று நின்றது. இந்த விபத்து குறித்து உடனடியாக ரெயில் நிலைய அதிகாரிகள் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 1-வது நடைமேடைக்கு செல்லும் அனைத்து மின்சார இணைப்பையும் ரெயில்வே ஊழியர்கள் துண்டித்தனர்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை, ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. சந்தோஷ் என்.சந்திரன், சென்னை ரெயில்வே போலீஸ் எஸ்.பி. இளங்கோ, சென்னை எழும்பூர் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்

பணிமனையில் இருந்து ரெயிலை பவித்ரன் இயக்கி வந்தார். மிதமான வேகத்தில் ரெயில் நிலையம் உள்ளே மின்சார ரெயில் வரத்தொடங்கியபோது ‘பிரேக்’ செயல்படவில்லை என பவித்ரன் நடைமேடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் உடனடியாக அங்கிருந்த பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த 2 கடைகளும் மூடப்பட்டிருந்தன. மின்சார ரெயில் ஓட்டுனர் பவித்ரனின் சாதுர்யத்தால்தான் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மீட்பு பணி

இதையடுத்து விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். கூடுதல் உதவிக்காக 2-வது நடைமேடைக்கு நவீன எந்திரங்கள் கொண்ட ரெயில் பெட்டியும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மேலும் ரெயில்வே என்ஜினீயரிங் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான 2 பெட்டிகளில் இருந்து மற்ற 10 பெட்டிகளுக்கும் உள்ள இணைப்பை நவீன ‘வெல்டிங்’ எந்திரம் மூலம் ஊழியர்கள் பிரித்தனர்.

இதையடுத்து மறுமுனையில் இருந்த மின்சார ரெயில் என்ஜின் இயக்கப்பட்டு அந்த 10 பெட்டிகளும் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து விபத்துக்குள்ளான 2 பெட்டிகளையும் மீண்டும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான மின்சார ரெயில் என்ஜின் அதற்கு அடுத்திருந்த பெட்டியின் உள்ளே சிறிது சென்றிருந்ததால் 2 பெட்டிகளையும் தனித்தனியாக பிரித்து எடுக்க ரெயில்வே ஊழியர்கள் முடிவு செய்தனர்.

டீசல் என்ஜின் உதவியுடன்...

இதையடுத்து ‘டபிள்யூ.டி.எம்.-7’ எனப்படும் டீசல் என்ஜின் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான மின்சார ரெயில் என்ஜின் பெட்டியில் இருந்து முதல் வகுப்பு பெட்டியை, நவீன ‘வெல்டிங்’ எந்திரம் கொண்டு ரெயில்வே ஊழியர்கள் பிரித்து எடுத்தனர். இந்த நிலையில் டீசல் என்ஜினையும் தண்டவாளத்தில் இருந்த முதல் வகுப்பு பெட்டியையும் சங்கிலி மூலம் ரெயில்வே ஊழியர்கள் இணைத்தனர்.

இதையடுத்து அந்த பெட்டி மீட்கப்பட்டு, பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து இடிபாடுகளின் மேல் உள்ள மின்சார ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். புதிய கப்பலை கடலுக்குள் இறக்குவதுபோல், மின்சார ரெயிலின் என்ஜினை மீட்க கட்டைகள் அடுக்கப்பட்டு, அங்குலம் அங்குலமாக தண்டவாளத்தில் வைத்தனர். இதையடுத்து டீசல் என்ஜின் மூலம் விபத்துக்குள்ளான மின்சார ரெயில் என்ஜினும் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பயணிகள் சிரமம்

கடற்கரை ரெயில் நிலையத்தின், 4 நடைமேடைகளில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைமேடை 1-ல் விபத்து ஏற்பட்டதால், மின்சார ரெயில்கள் நடைமேடை 3 மற்றும் 4-ல் இருந்து மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சில ரெயில்கள் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

வீடியோ


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments