புதுக்கோட்டையில் நண்பர்களுடன் குளியல்: குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி மலை உச்சியில் இருந்து குதிக்கும் வீடியோ வைரல்



புதுக்கோட்டையில் நண்பர்களுடன் குளித்த போது குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். மலையின் உச்சியில் இருந்து அவர் குதித்த வீடியோ வைரலானது.

என்ஜினீயரிங் மாணவர்

புதுக்கோட்டை நகரில் அக்கட்சியாகுளம் பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் பிரகதீஸ்வரன் (வயது 17). இவர் புதுக்கோட்டையில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பிரகதீஸ்வரன் தனது நண்பர்களான மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், வினோத், வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து திருக்கோகர்ணம் புதுத்தெருவில் உள்ள ராசா குளத்திற்கு குளிக்க சென்றார்.

அந்த குளமானது முன்பு கல்குவாரியாக இருந்துள்ளது. மலையில் பாறைகள் தோண்டி கல் எடுக்கப்பட்ட பின் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீ்ர் தேங்கி குளமாக மாறியுள்ளது. இதில் அப்பகுதியினர் குளிப்பது வழக்கம்.

குளத்தில் மூழ்கினார்

இந்த நிலையில் பிரகதீஸ்வரன் மாலை வேளையில் நண்பர்களுடன் அந்த குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது மலையின் உச்சியில் இருந்து குளத்து தண்ணீரில் குதித்து குளிக்க முயன்றார். அதனை வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக ஒருவர் வீடியோ எடுத்தார். இந்நிலையில் பிரகதீஸ்வரன் மலையின் உச்சியில் இருந்து குதித்தார்.

அப்போது அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவரும், அவரது நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் மற்றும் திருக்கோகர்ணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் தண்ணீரில் மூழ்கிய பிரகதீஸ்வரனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பிணமாக மீட்பு

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை மீண்டும் குளத்தில் இறங்கி பிரகதீஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5.30 மணிநேர தேடுதலுக்கு பின் காலை 11.30 மணி அளவில் பிரகதீஸ்வரனை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு பிரகதீஸ்வரனின் உடலை கண்டு அவரது உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் கதறி அழுதனர். அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடி இருந்த நிலையில் பரபரப்பாக காணப்பட்டது.

பிரகதீஸ்வரனின் உடலை திருக்கோகர்ணம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வீடியோ வைரல்

பிரகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் குளிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மலையின் உச்சியில் இருந்து முதலில் ஒருவர் குதிப்பதும், பின்னர் 2-வதாக பிரகதீஸ்வரன் குதிப்பதும் பதிவாகி உள்ளது. குளத்தில் குதித்த பின் அவர் தண்ணீரில் இருந்து மேலே வரவில்லை. இதுவரை அந்த வீடியோ பதிவாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments