புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு 25, 26-ந் தேதிகளில் நடக்கிறது





புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 25, 26-ந் தேதிகளில் மீன்பிடி விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இம்மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசை படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் மானிய விலையிலான டீசல் மற்றும் இதர மானியத்திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

விசைப்படகுகள்

இந்த நிலையில் நடப்பாண்டில் (2022) புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளை வருகிற 25, 26-ந் தேதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரியும் மீன்வளத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வின் போது, மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி, ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும். நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.

விசைப்படகுகள் ஆய்வின் போது காண்பிக்கப்படாத படகுகளுக்கு விற்பனைவரி விலக்களிக்கப்பட்ட டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அப்படகுகளின் பதிவு சான்றினை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆய்வுக்கு காண்பிக்காத படகுகள்...

ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்குட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது. ஆய்வுக்குட்படுத்தப்படாமையால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு துறை பொறுப்பேற்காது.

நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத பதிவு செய்யப்படாத படகுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ்புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடவும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் விசைப்படகு உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

படகின் பதிவெண்

ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் விசைப்படகில் ஆய்வுக்குழு ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். படகுகளின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்று ஆகியவைகளின் அசல் ஆவணங்களுடன் அவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ஆய்வுக் குழுவினரிடம் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆய்வு பணி காலை 7 மணிக்கு தொடங்கும். ஆய்வுப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுடன் அப்படகின் பதிவெண் தெளிவாக தெரியும் வண்ணம் 2 புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தப்படும்.

விசைப்படகில் உள்ள கடற்பாதுகாப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு கருவிகள் போன்றவற்றின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும் துறை மூலம் முழு மானிய உதவியில் வழங்கப்பட்ட, பகுதி மானிய உதவியில் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகளை ஆய்வுக்கு காண்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

படகு கட்டப்பட்டு, பதிவு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் தொழிலில் ஈடுபட்டுவரும் படகுகளை தீவிரமாக ஆய்வு செய்த அப்படகுகள் கடலில் செலுத்த தகுதி வாய்ந்தவையாக உள்ளனவா? என்பதை படகினை இயக்கி பார்த்து படகு மீன்பிடிக்க அனுமதிக்கப்படும். ஆய்வுக்குட்படுத்தப்படாத மீன்பிடி விசை படகுகளுக்கான மானிய விலையிலான டீசல் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட / பதிவு செய்யப்படாத படகுகளை தவறாமல் மேற்கண்ட நாட்களில் ஆய்வுக்குழுவிற்கு ஆய்வுக்குட்படுத்திடுமாறு கலெக்டர் கவிதாராமு கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments