ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்- பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை






ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுரவளர்ச்சி அடைந்து இருக்கிறது. 2021-22-ம் நிதியாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளமான பிக்கி தெரிவித்து இருந்தது. 2023-ல் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல் ஆசையை தூண்டி விட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல. மோசடி ரம்மி.

ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சினை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்.

இந்த காணொலியை கண்ட பிறகும் விளையாடினால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments