புதுக்கோட்டை, அன்னவாசல் கட்டுமாவடி பகுதிகளில் பலத்த மழை





புதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பற்றி எரிந்தது.

கட்டுமாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்திருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கிருஷ்ணாஜிப்பட்டினம், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

பலத்த மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5.30 மணிக்கு மேல் லேசாக தூறியது. சிறிது நேரத்திற்கு பின் மழை பரவலாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவில் தூறியபடி இருந்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது


சாக்கடை கால்வாய்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீரோடு கலந்தோடியது. கடும் வெப்பத்தால் அவதிப்பட்ட நிலையில் இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள அரசு விழாவுக்கான மேடை, பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. மேலும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னை மரத்தில் தீ

நேற்று இரவு இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் செங்கப்பட்டியில் ஒரு தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments