ஆவுடையார்கோவில் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்




ஆவுடையார்கோவில் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா பெருமாள் பட்டி கிராமத்தை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் சுரேஷ் (வயது 30). இவருக்கும், ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நிஷா (22) என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் பிறந்ததால் நிஷாவை அவருடைய பெற்றோர் சொந்த ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மீன் வாங்கிக்கொண்டு மாமியார் வீடான வீரமங்கலத்திற்கு சுரேஷ் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிஷா வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தில் நிஷாவின் துப்பட்டாவில் சுரேஷ் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து சுரேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments