இந்தியாவில் நுழைந்தது குரங்கு அம்மை - கேரளாவில் ஒருவருக்கு உறுதி




ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீப காலமாக பல்வேறு நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உட்பட 57 நாடுகளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு தற்போது இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி, பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

கடந்த 1958ம் ஆண்டு குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ என்ற பெயர் சூட்டப்பட்டது. முதன்முதலில் குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போது இந்த வைரஸ், மனிதனிடம் இருந்தே மனிதனுக்குப் பரவுகிறது.

அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் "50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை 3,411 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 86 சதவீத பாதிப்பு ஐரோப்பிய கண்டத்திலும், 11 சதவீத பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பிற்கு நாடுகளுடைய பட்டியலிடப்பட்ட நிலையில் அந்த நாடுகளில் இருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை நோய் குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குடல் புண் நோய் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

ஏதேனும் மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குரங்கம்மை நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான அளவு படுக்கை வசதிகள் மருத்துவர்கள் செவிலியர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று உள்ள சூழலிலும் வேறு நோய்கள் வந்தாலும் அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments