பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு





பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி முதல் தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு மகன் உள்ளூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 31-ந்தேதி உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்காக முகமது ஹனிபா குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம், சிறுகுடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

47 பவுன் நகை-பணம் கொள்ளை

இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது ஹனிபா வீட்டின் உள்ளே சென்றுபார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 47 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னமராவதி போலீசாருக்கு முகமது ஹனிபா தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.




மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 47 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments