இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்




இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் விசை படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் எந்திரப்படகில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் 20-ந்தேதியன்று (நேற்று) கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தீவிர முயற்சி

இவர்கள் தவிர, ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சமீபத்தில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேவேளையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் மூலமாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments