ஆயுத பூஜையையொட்டி வருகிற 30, அக்டோபர் 1-ந்தேதிகளில் சென்னையில் இருந்து 4,150 பஸ்கள் இயக்கம் தமிழக அரசு அறிவிப்பு




 
ஆயுத பூஜையையொட்டி வருகிற 30, அக்டோபர் 1-ந்தேதிகளில் சென்னையில் இருந்து 4,150 பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆயுதபூஜை விடுமுறை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை வருகிற அக்டோபர் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து விஜயதசமி 5-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் வேலை பார்த்து வரும் மக்கள் திங்கட்கிழமை ஒருநாள் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் அக்டோபர் 1-ந்தேதி (சனிக்கிழமை) சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள்.

இதனால், ஏற்படும் கூட்ட நெரிசலை போக்க தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.




இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

4,150 பஸ்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜையை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி, அக்டோபர் 1-ந்தேதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பஸ்களுடன், 2 ஆயிரத்து 50 சிறப்பு பஸ்களையும், பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ஆயிரத்து 650 சிறப்பு பஸ்களையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக பஸ் நிலையங்கள்

மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற குறிப்பிட்ட தொலைதூர பஸ்கள், வருகிற 30 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் தற்காலிக பஸ் நிலையங்களான தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இதர பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

அதன்படி, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை (மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பூந்தமல்லி பணிமனை அருகில்) சாலையில் இருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து...

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் (வழி இ.சி.ஆர்.), மயிலாடுதுறை, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

எனவே, பயணிகள் மேற்கூறிய பஸ் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments