பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு 5 ஆண்டு தடை‌ - மத்திய அரசு அறிவிப்பு



பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகள் ஐந்தாண்டு காலத்திற்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் கிளைகளை பரப்பி, சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பாக கருதப்படுகிறது. பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம் சாட்டி, அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்திருக்கின்றனர்.

இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும் எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்திருக்கிறது. சட்டவிரோத பணிக்கான பணப் பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றசாட்டுகளை அந்த அமைப்பின் மீது என்.ஐ.ஏ சுமத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக வெளிப்படையாக செயல்படுகின்றன, ஆனால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தீவிரவாத ரகசிய நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்றனர். சமூகத்தின் ஒரு பிரிவினர் ஜனநாயகத்தின் கருத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்புக்கு முற்றிலும் அவமரியாதை செய்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments