மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு: “ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை” மாணவர்கள் மைதானத்தை மறந்துவிட்டார்கள் எனவும் நீதிபதிகள் ஆவேசம்




இளம் தலைமுறையினரை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை என்றும், மாணவர்கள் மைதானங்களையே மறந்துவிட்டார்கள் எனவும் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் நீதிபதிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

ஆன்லைன் விளையாட்டு

மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு விசாரணையின்போது, பிரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த சிறுமியை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் சிலர், தங்களின் குழந்தைகளும் இதற்கு அடிமையாகி இருப்பதாக புகார் அளித்தனர்.

தற்போது பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் பிரபலமானவை என்று வக்கீல்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளார்கள், அதற்காக அவர்கள் உடல், உளவியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றிலும் தகுந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, கல்வி மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் போன்றவற்றிலிருந்து விலகிச் செல்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும்.

விழிப்புணர்வு

எனவே, இந்த வகையான ஆன்லைன் விளையாட்டுகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. இளைஞர்களை, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் காவல்துறைக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பங்கு உள்ளது. பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள்? என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை ‘அன்இன்ஸ்டால்’் செய்ய வைக்க வேண்டும்.கடந்த 2020-ம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக, மத்திய அரசு சில ஆன்லைன் விளையாட்டு மற்றும் சீன செயலிகளை தடைசெய்தது. அதன்பின் இந்த விளையாட்டு நிறுவனங்கள், தங்கள் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை திருத்தி கடந்த ஆண்டில் அதிகாரப்பூர்வ விளையாட்டுத்தளங்களில் மீண்டும் நுழைந்தன.

இந்த விளையாட்டுகள் பெண் குழந்தைகள், பெண்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அவர்கள் அவதூறான நபர்களின் கைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஒழுங்குபடுத்துதல்

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்காக விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (வி.பி.என்.) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

எனவே வி.பி.என். பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், திருட்டு தரவுகளை பதிவிறக்கம் செய்ய பயிற்சி வீடியோக்கள், தடைசெய்யப்பட்ட விளையாட்டுகளை நிறுவுதல் போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

முடிவு கட்டுவோம்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் இளம் தலைமுறையினர் சம்பந்தப்பட்டது. இதை சாதாரணமானதாக எடுக்கக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியதால் தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று விளையாடுவதையே மறந்து விட்டனர். இப்படியே இந்த விவகாரத்தை விட்டு விட்டால் பெரும் ஆபத்தில் முடியும். இதற்கு முடிவு கட்டாமல் விடப்போவதில்லை” என்றனர்.

அறிக்கை தாக்கல் செய்யுங்கள்

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, பப்ஜி, பிரீ பயர் போன்ற விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாடக்கூடாது என்பதில் தமிழக அரசும் உறுதியாக உள்ளது. தற்போது கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், “வக்கீல் சமுதாயம் உலகையே மாற்றும் ஆற்றல் பெற்றது. எனவே இந்த வழக்கு தொடர்பாக வக்கீல்கள் உரிய விவரங்களைத் தாக்கல் செய்யலாம்” என குறிப்பிட்டனர்.

மேலும் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் வருகிற 27-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் கூகுள், யூடியூப் உள்ளிட்ட இணையதள நிறுவனங்களையும் எதிர்மனுதாரார்களாக சேர்க்கிறோம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments