எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது! இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!!



எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த வளர்செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் மாதவன் (வயது 21), வீரமணி (44), அறிவழகன் (35), தாமரைச்செல்வன் (38), முத்துப்பாண்டி (45) ஆகிய 5 பேரும், ஜெவீலா என்பவருக்கு சொந்தமான படகில் கலைச்செல்வன் (35), காளிதாஸ் (32), அஜய் (29), நவீன் (30), விஜி (25) ஆகிய 5 பேரும், மகேந்திரன் (50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், மாயகிருஷ்ணன் (65), முருகன் (40), பாண்டி (38), குமரவேல் (26), ஆகிய 5 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல் சிவபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அய்யனார் (41), ஜெயந்தன் (43), பிரதீப் (46), சுப்பிரமணி (39), குப்புராஜ் (55) ஆகிய 5 பேரும், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தியாகு (48), பாண்டி (46), காடியப்பன் (26), பாண்டி (26) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 24 பேரும், 5 விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், அவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக கொண்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்வது குறித்து பலமுறை மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் இருநாட்டு மீனவர்களும் சுமுகமாக மீன் பிடிக்க இருநாட்டு பிரதிநிதிகளையும் அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த எண்ணற்ற விசைப்படகுகள் இலங்கையில் உள்ளன. அத்தனை விசைப்படகுகளையும் அரசு மீட்டு மீனவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர்.

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments