அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு: புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்




அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் புதுக்கோட்டை மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

24 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29-ந் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்கக்கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இந்தநிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீனவ சங்க நிர்வாகிகளை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கூடிய விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

எனவே வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெகதாப்பட்டினம் மீனவ சங்க நிர்வாகிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று (சனிக்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments