குப்பைகளால் சூழ்ந்திருக்கும் கோபாலப்பட்டிணம்! கிராமசபையில் தீர்வு எட்டப்படுமா.? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!



கோபாலப்பட்டிணத்தில் குப்பைகள் சூழ்ந்திருக்கும் நிலையில் கிராமசபை கூட்டத்தில் தீர்வு எட்டப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோபாலப்பட்டிணத்தில் முக்கிய சாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிக்கூடம் என குப்பைகள் சூழ்ந்து, பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோபாலப்பட்டிணம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2000க்கு மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கோபாலப்பட்டிணம் கிராமமானது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய கிராமமாகும். 

இந்த கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஒன்றை ஆண்டுகள் மேலாக வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊரில் உள்ள ஒரு இடத்தில் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் இந்த குப்பைகளால் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.மேலும் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டது. பிறகு தற்காலிகமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொட்டப்பட்டு வந்தது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் குப்பை எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.  

இதனால் கோபாலப்பட்டிணம் மக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை குளத்து மேடு, சாலையின் ஓரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இதனால் கோபாலப்பட்டிணம் முழுவதும் குப்பை காடாக காட்சியளிக்கிறது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. பல இடங்களில் சாலையோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இப்போது கோடை மழை பெய்வதால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் ஓடுவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த 10.01.2023 அன்று அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கோபாலப்பட்டிணம் மக்கள், ஜமாத்தார்கள், தோழமைக்கட்சி நண்பர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீண்ட கால கோரிக்கையான கோபாலப்பட்டிணம் கிராமத்தில் உள்ள குப்பைகளைக் கொட்டுவதற்காக இடப்பார்வை செய்து ஏற்கெனவே குப்பை கொட்டிய இடமான புலஎண் 44 மற்றும் 45-க்கு தென்கிழக்கு மற்றும் வாரிக்கு வடபுறம் கடல் வற்றிய புறம்போக்கு இடத்தில் குப்பைக் கொட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு மேற்படி இடத்தினை கோபாலப்பட்டிணம் கிராமம் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மேற்படி இடம் கோபாலப்பட்டிணம் கிராமத்தார்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் முன்னிலையில் அனைவரின் ஒப்புதலுடன் மேற்படி இடத்தினை குப்பைக் கொட்ட பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரைக்கும் குப்பை எடுக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. 

குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கழிவுநீர் செல்லாமல் தடுப்பதுடன் குப்பைகளை அகற்றி கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நாளை தொழிலாளர் தினமான மே-1 நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கிராமசபை கூட்டத்தில் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments